வெறும் 10 நிமிடத்திற்குள் பொதுமக்கள் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
நடைமேடையில் நடந்து சென்றவர்களை சராமாரியாக கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாநில குடியிருப்புப் பகுதியில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை சராமாரியாக தாக்கினார். இதில் நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக பேசிய ஆணையர் நயிலா ஹாசன், கண் இமைக்கும் வேகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக தகவல் கிடைத்ததை அடுத்து, குடியிருப்புப் பகுதிக்கு சென்றோம். அங்கு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். பிறகு, தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நியூசிலாந்து நாட்டில் இரண்டு முறை பொதுமக்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆக்லாந்து பல்பொருள் அங்காடியில் புகுந்த பயங்கரவாதி, 5 பேரை கத்தியால் குத்தி கொலை செய்தான். அதையடுத்து காவல்துறை எடுத்த நடவடிக்கையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
அதேபோன்ற கடந்தாண்டு மே மாதம் டண்டெயின் பகுதியிலுள்ள பல்பொருள அங்காடிக்குள் புகுந்த லூக் லாக்பர்ட் (43) என்கிற நபர், நான்கு பேரை கத்தியால் குத்தினான். மேலும் பலர் மீது தாக்குதல் நடத்தினான். அந்த நபரை காவல்துறையினர் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தற்போது குற்றவாளி லூக்கிற்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்லாந்து குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவம் நியூசிலாந்து வாசிகளை கவலையடைச் செய்துள்ளது. காவல்துறையினர் இதை இனவெறி குற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுதொடர்பான விபரங்களை ஆக்லாந்து காவல்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.