தேசிய மாற்றுத்திறனாளிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடிலேய்டைச் சேர்ந்த ஆன் மாரி ஸ்மித் (54) என்கிற மாற்றுத்திறனாளி பெண் பராமரிக்கப்பட்டு வந்தார். அவரை தனியார் காப்பகம் ஒன்று கவனித்து வந்தது. பெண்ணின் தனிப்பட்ட கவனிப்புக்காக ரோஸி மரியா மேயோன் (70) என்கிற பெண் நியமிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கென்னிங்க்ஸ்டன் பார்க் பகுதியிலுள்ள தனது வீட்டில் ஆன் மாரி ஸ்மித் மோசமான நிலையில் கிடந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நாட்களில் உடலில் இருந்த காயங்களால் ஏற்பட்ட சோர்வு, அதனால் உருவான அழுத்தம், உறுப்புகள் செயலிழிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களாக் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஆன் மேரி ஸ்மித்தை கொடுமைப்படுத்தி உயிரிழக்க காரணமாக இருந்ததாகக் கூறி அவருடைய பராமரிப்பாளர் ரோஸி மரியா மேயோன் கைது செய்தது போலீஸ். தன்னுடைய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, பிணையில் வெளியே வர முடியாத 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி அடிலேய்டு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.
மேலும் ஊழியரின் போக்கு மற்றும் பணியை கவனிக்க தவறியதாக கூறி, தனியார் காப்பாகத்தின் இயக்குநர்கள் ஏமி ஜூன் காலின்ஸ் (42) மற்றும் ஆலிசன் மேரி விர்கோ (40) இருவரையும் காவல்துறை கைது செய்தது. இதையடுத்து அவர்கள் ஜாமீன் கோரி அடிலேய்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இயக்குநர்கள் இருவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவர்களுடைய கடவு அட்டையை வாங்கி வைத்துக் கொண்ட நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அடிலேய்டு நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.