நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. மூன்றாவது முறையாக தடுப்பூசி போட்டும், இன்னும் கிருமித்தொற்று முழுமையாக நீங்கிவிடவில்லை. இதையொட்டி நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் சந்திப்பு நடத்தியது.
அதில் தற்போதுள்ள சூழலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது, உயிரிழப்புகள் கூட நேரிடலாம், இதற்கு நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கிய தீர்வாக அமையும் என்று சுகாதாரத்துறைக்கு நிபுணர் குழு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சுகாதார அமைச்சர் பட்லர், கொரோனா பரவல் தொடர்பாக நிபுணர் குழு ஆலோசனை வழங்கிய தகவலை உறுதி செய்தார். ஆனால் 65 வயதைக் கடந்துவிட்ட பெரும்பாலானோருக்கு உடல்நலன் சார்ந்து வேறு சில முக்கிய பிரச்னைகள் இருக்கும். அதனால் அவர்கள் நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி போடுவது சரியான தீர்வை அளிக்குமா என்று நிபுணர் குழு ஆய்வு செய்து வருவதாக கூறினார். எனினும் ஆஸ்திரேலியாவில் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு விரைவில் நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் குளிர்காலம் துவங்கியுள்ளதை அடுத்து, அது முடிந்தவுடன் தடுப்பூசிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் உறுதியாகும் பட்சத்தில், 30 வயதுக்கு குறைவானவர்கள் தடுப்பூசி செலுத்தும் தேவையிருக்காது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடல்நலன் ஆரோக்கியம் கொண்ட 30 வயது குறைவானவர்களுக்கு நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் பட்லரிடம் நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.