இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததை அடுத்து திருமணம் செய்துகொண்டனர். இருவரும் மத்திய குயின்ஸ்லாந்துப் பகுதியான பிலோலாவில் வசித்து வந்தனர். அவர்களுக்கு கோபிகா (6) மற்றும் தாரணிகா (4) என இரண்டு மகள்கள் பிறந்தனர். குழந்தைகள் இருவரும் ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிலோலாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர்கள், அகதிகள் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். சட்டத்துக்கு எதிராக அப்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டதாகக் கூறி நடேசலிங்கம் மற்றும் அவருடைய குடும்பத்தினரை மீட்க சுமார் 60,000 பேர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போதைய ஸ்காட் மோரீசன் 2019-ம் ஆண்டு நடேசலிங்கம் குடும்பத்தினரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதையடுத்து அவர்கள் தொடர்ந்து அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது புதியதாக ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டனி ஆல்பானிஸ், நடேசலிங்கம் குடும்பத்தினரை அவர்களுடைய வாழ்விடப் பகுதியான பிலோலாவில் குடியேற அனுமதி அளித்தார். இதையடுத்து பெர்த் பகுதியில் இருந்து நடேசலிங்கம், அவருடைய மனைவி ப்ரியா மற்றும் மகள்கள் கோபிகா, தாரணிகா ஆகிய நால்வரும் பிலாலோவுக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், பிலோவில் புதியதாக வாழ்க்கையை ஆரம்பிக்க நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். இதுவொரு மறுபிறப்பு என்று தெரிவித்தனர்.