பிஜியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 9 நாட்கள் இடைவெளியிலும் தொற்று பரவல் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இரண்டாம் அலை பரவலால் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இரு முக்கிய அரசு மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் கொடுக்கப்படும் சிகிச்சைகள், மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவர்களும் தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக பிஜியில் கொரோனா சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதால், பல நேரங்கள் மருத்துவர்களும் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் வருகின்றனர். இதனால் மருத்துவர்களும் தனிமை படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணாமாக கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாட்டை பிஜி சுகாதாரத்துறை செய்துள்ளது.
பணி ஓய்வு பெற்ற அனுபவமிக்க செவிலியர்களை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது சுகாதாரத்துறை. மேலும் ஒரு கப்பலில் கர்ப்பிணி பெண்களுக்கு சிக்கிச்சையளிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவுன் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எலிசபெத் மார்க்கரெட், கப்பலில் குழந்தை பெற்றுக்கொள்வது சற்றே அச்சமூட்டுவதாக இருந்தாலும், தொற்றில் இருந்து பாதுகாப்பாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
MV Veivueti கப்பல் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 4 அனுபவமிக்க செவிலியர்கள் பணிபுரிவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகப்பேறு மருத்துவர் புஷ்பா நவூசியர், தொற்று பரவல் அதிகமிருந்தாலும், வீடுகளில் குழந்தை பெற்றுக்கொள்வது ஆபத்தானது என்று கூறியுள்ளார்.கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மருத்துவர் புஷ்பா தெரிவித்துள்ளார்.
பிஜியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் முதல் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிஜியில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை எட்டினாலும் முழு ஊரடங்கு என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறும் என்று பிஜியின் சுகாதாரத்துறை செயலாளர் ஜேம்ஸ் பாங் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3h1ZGiU