விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமை படுத்துவதற்கு 500 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் மையத்தை அமைக்க விக்டோரியா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய கட்டிடம் ஒன்றை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் Avalon விமான நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த மையம் அமைப்பதற்கான இடத்தையும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
இதற்கான திட்டப்பணிகள் உடன் கூடிய ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாண அரசு காமன்வெல்த் மற்றும் மத்திய அரசுடன் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக காமன்வெல்த் 200 மில்லியன் டாலர் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஸ்காட் மோரிசன் அரசாங்கம் Avalon விமான நிலையத்தில் இருந்து தென்மேற்கு மெல்போர்னில் முப்பது கிலோமீட்டர் தூரத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்கவும் தயாராக உள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் தீவிர பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்தும் விக்டோரியாவுக்கு வரும் ஆஸ்திரேலியர்களை விமான நிலையத்திற்கு அருகிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்படும் என்றும், விரைவில் மாநில அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசு 15 மில்லியன் டாலர்களை செலவழித்து திட்டப் பணிகளுக்கான முன் தயாரிப்பு வேலைகளைச் செய்துள்ளதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் பிரிமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார். ஓட்டல்களில் தனிமைப்படுத்தும் நபர்களோடு வேறு சில சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருப்பதால் அவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதோடு தொற்றுப்பரவல் தொடர்புச் சங்கிலி நீண்டுகொண்டே போகிறது என்றும், அதனைத் தடுப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாகவும் ஆன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3gc32hG