வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக அடிலெய்ட் வந்த பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 60 வயது நபர் ஒருவருக்கும், 2 வயது குழந்தைக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அடிலெய்ட் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஓட்டலில் தனிமைப் படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி Nicola Spurrier தெரிவித்துள்ளார்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விமானத்தில் பயணிக்கும் போது முகக் கவசம் அணியத் தேவையில்லை என்ற காரணத்தால், இந்த குழந்தைக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதே விமானத்தில் வந்த சிலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த குறிப்பிட்ட விமானத்தில் வந்த பயணிகள் தொடர்பாக தாங்கள் மிகவும் கவலை அடைந்ததாகவும் மேலும் பலருக்கு பரிசோதனைகள் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் Nicola Spurrier கூறியுள்ளார். தொற்று பாதித்துள்ள 60 வயது நபர் ராயல் அடிலெய்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே தெற்கு ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்த படும் என்று கூறப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர்களுக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு மாகாணங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய தடுப்பூசிகளை விரைந்து தர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தபட்ச முதியார் பராமரிப்பாளர்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டு்ள்ளதாகவும் Nicola Spurrier குறிப்பிட்டுள்ளார்.
முதியோர் பராமரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற பட்டியலில் இருப்பதாகவும் அவர்களின் மீது அக்கறை கொள்வது அவசியமானது என்றும் பிரீமியர்
Steven Marshall கூறியுள்ளார். மேலும், குறைந்த கால அவகாசத்தில் அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கவே ஃபைசர் நிறுவன தடுப்பூசியை தாங்கள் கோரியுள்ளதாகவும் Steven Marshall தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/2TxfssQ