சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால், அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். திருச்சியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி பேசியது:
தமிழக மக்களுக்கு அதிமுக அரசு அடுக்கடுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய, மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. கோடீஸ்வரர்களை எம்.பி.க்களாக உருவாக்கி அவர்களது தொழிலை பாதுகாக்க செய்தது திமுக.
தமிழகத்தின் மீதோ, தமிழக மக்களின் மீதோ திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை. திமுகவைப் போல ஆட்சி அதிகாரத்துக்காக மத்திய அரசுடன் இணக்கமாக செல்லவில்லை. மக்கள் நலனுக்காக மட்டுமே அதிமுக இணக்கமாக செல்கிறது.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி மட்டுமே. கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே 1.74 லட்சம் கோடி ஊழல் என இந்தியாவிலேயே மெகா ஊழல் செய்தது திமுக மட்டுமே. அத்தகைய கொள்ளை கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றார்.
மேலும் அவர் பேசுகையில்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நிலமும், வீடும் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
காவிரியை நம்பித்தான் தமிழகம் பாசனம் உள்ளது. ஆனால் கர்நாடக அரசு ஒவ்வொரு முறையும் உபரி நீரை மட்டுமே வழங்குகிறது. கர்நாடகத்திலிருந்து நமக்கான உரிமையை வாதாடி, போராடி பெற வேண்டியுள்ளது. எனவே கோதாவரி & காவிரி இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர்த்து, எந்த ஒரு காரணத்துக்காகவும் அரசு கோப்பு என்னிடம் நிலுவையில் இருந்ததில்லை. சட்டப்பேரவையில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் சென்ற முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளேன். மக்கள் நலனுக்காகவே இப்படி பணியாற்றுகிறேன்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று தமிழகத்துக்காக எதையும் பெற்றுத்தரவில்லை என்றார்.