கடந்த ஜனவரியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மார்ச் 31க்குள் 40 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தற்போது வரை 16 சதவீதம் பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதாவது முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், முன்கள சுகாதார பணியாளர்கள் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 70 வயதுடையவர்களுக்கும், 55 வயதான உள்நாட்டு குடிமக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த வாரம் தொடங்கியுள்ளது.
அண்மையில் அரசு சார்பாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் 50 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மே மாதமும், அதனை தொடர்ந்து அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்ட் இந்தாண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலிய குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் கோவிட் பரவல் அதிகரித்துள்ளதால் , ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய தடுப்புசிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பி விடப்படுகிறது. அதே நேரம் உள்நட்டிலேயே தயாரிக்கப்படும் அஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குயின்ஸ் லேண்ட் மாகாணம் தடுப்பூசிகளை பதுக்குவதாக மத்திய அரசு குற்றம்சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.