சீனாவின் முக்கிய பொருளாதார மையங்களாக கருதப்படும் ஷாங்காயில் பல்வேறு பகுதிகளில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு விட்ட நிலையில் உணவு விநியோகம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
2.6 கோடி மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஷாங்காயில் ஒரே நாளில் 73 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு போடப்பட்டுள்ள இதன் காரணமாக மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியில் வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
மேலும் தொற்று பாதித்தவர்களுக்கு மருந்து உணவு உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்காக அரசு தரப்பில் 11 ஆயிரம் டெலிவிரி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பின் வேகம் மிக மோசமாக அதிகரித்து வருவதாகவும், தற்போது ஷாங்காயில் ஏற்பட்டுள்ள நிலை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் சுகாதார ஆணையத்தின் தலைவர் Wu Qianyu தெரிவித்துள்ளார்.
காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருள்கள் மற்றும் அவசர சேவைகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது சவாலானதாக மாறி உள்ளது. மேலும் தினசரி கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக அந்நாட்டின் சேவை மற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.இது அந்நாட்டிற்கும் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2020ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று முதல்முதலாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கோவிட் பரவல் இதுவாகும். இதை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 38 ஆயிரம் மருத்துவ பணியாளர்களையும், 2 ஆயிரம் ராணுவ வீரர்களையும் ஷாங்காய் மாகாணத்தில் அந்நாட்டு அரசு களமிறக்கியுள்ளது.
இதனிடையே ஷாங்காய் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக உதவிகள் மற்றும் உணவு பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Link Source: https://ab.co/37uZwhC