ஆஸ்திரேலியாவில் கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்துதல் இன்றி வெளிநாட்டுக்கும், வெளிநாட்டில் இருந்து உள்நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரத்தில், சர்வதேச எல்லைக்கட்டுப்பாடுகள் பரவலாக நீக்கப்பட வேண்டும் எனில் இன்னும் பல கோவிட் 19 தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசித் திட்டம் என்பது ஒன்றும் நம்மை பாதுகாக்க இருக்கும் வெள்ளித் தோட்டா அல்ல என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகளை திறந்து மக்களை அனுமதிக்கும் போது நிச்சயம் வாரத்திற்கு ஆயிரம் என தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அதனை உள்நாட்டு மக்கள் சந்திக்கும் நிலை உருவாகும் என்றும் பிரதமர் வானொலியில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும், அதே நேரம் எல்லைகளை மூடுவது, ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற திட்டங்களை ஆஸ்திரேலிய மக்கள் வரவேற்பார்கள் என தான் நினைக்கவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா எல்லைகள் திறப்பு குறித்து பரிசீலிப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய அரசின் மருத்துவ நிபுணர் குழுவிடம் தேசிய அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம், நியூசிலாந்து தனது எல்லைகளை இம்மாத இறுதியில் திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும், ஓட்டல் தனிமைப்படுத்துதலை நீக்கவும் அதற்கு பதிலான மாற்றுத்திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கு தடுப்பூசி போடுவது தான் தற்போதைய திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், அதன் மூலமாகவே அவர்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றம் பெர்த்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் பேசியுள்ளார்.
தொடக்க காலத்தில் அத்தியாவசிய நோக்கத்திற்காக மருத்துவக் காரணங்கள், வணிகம், முக்கிய நிகழ்வுகள், இறுதிச் சடங்குகள், குடும்ப மற்றும் நண்பர்கள் சந்திப்புக்காக பயணங்கள் அவசியமானது என்று நினைக்கிறேன். தடுப்பூசி எடுத்துக் கொண்டால், ஓட்டலில் தனிமைப்படுத்துதல் இன்றி அவரவர் வீடுகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ வசதிப்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால் அதற்கு நிச்சயம் தடுப்பூசி போட வேண்டும். அது மக்களின் ஊக்குவிக்கும் விஷயமாக இருக்கும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.