அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கவிழ்நிலை பவர் லிப்ட் வணிகக் கப்பல் ஒன்று கடுமையான புயல் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த அரைமணி நேரத்தில் அமெரிக்க கடற்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், கடுமையான சூறாவளிக் காற்றில் காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்படுவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரடுமுரடான கடற்பகுதியில் இருந்து இதுவரை ஒருவர் சடலமாகவும், 6 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 12 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மணிக்கு 130 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதாகவும், அலைகளின் உயரம் 7 முதல் 9 அடி உயரத்தில் எழுவதன் காரணமாகவும் வணிகக்கப்பல் கவிழ்ந்ததாக கடற்படை கேப்டன் Will Watson கூறியுள்ளார். அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதால் கடலின் சூழலைப் பொறுத்து சவாலான மீட்புப்பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறைக்கு முக்கிய பங்காற்றும் இந்தக் கப்பலின் விவரங்கள் அனைத்தும் கப்பற்படையின் மீட்புக்குழுவினருக்கு பகிரப்பட்டு இருப்பதாகவும், மாயமானவர்கள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும் 12 பேரையும் உயிருடன் மீட்டு வருவோம் என்றும் கேப்டன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை மற்றும் தொடர் காற்று காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மிகவும் சவாலானதாக மாறி இருப்பதாகவும், விபத்திற்குள்ளான கப்பல் இரண்டு சிறப்பு நபர்கள் உட்பட 12 பணியாளர் குழுவினரும், 36 பயணிகளும் பயணிக்கும் வகையிலானது என்று கப்பல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பல் விபத்து தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி உரிய அறிக்கை அளிக்கப்படும் என்றும் கேப்டன் Will Watson தெரிவித்துள்ளார்.