தெற்கு ஆஸ்திரேலியாவின் Anangu Pitjantjatjara Yankunytjatjara பகுதியில் உள்ள நாய் ஒன்றிற்கு இந்த தொற்று இருப்பதை தலைமைக் கால்நடை மருத்துவர் Mary Carr உறுதிசெய்துள்ளார். இதேபோன்று வைரஸ் பாதிப்பை பரப்பும் பல உண்ணிகள் APY நிலத்தில் கண்டெடுக்கப்ட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் உடடினயாக உண்ணித்தடுப்பு ஊசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோதனையின் அடிப்படையில் எதிர்பார்த்தபடியே இந்த நோய்த்தொற்று தெற்கு ஆஸ்திரேலியாவில் முதலாவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர் மேரி கார் தெரிவித்துள்ளார். உரிய சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவிட்டால் நாய்கள் உயிருக்கு ஆபத்தாகும் என்றம் கூறப்பட்டுள்ளது.
Ehrlichiosis இருப்பதாக நம்பப்பட்டாலும் அதை கடந்த ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லே உள்ளிட்ட சில பகுதிகளில் கண்டறிந்த பின்பே உறுதி செய்யப்பட்டது. வட பிரதேசங்களில் அதிகமாக பரவி வருவது கண்டறிப்பட்ட பின் கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் ஆயிரம் நாய்கள் உண்ணி வைரஸ் தொற்றால் உயிரிழந்தது. மேலும் அது வட பிரதேசங்களின் தொலைதூர பழங்குடி சமூகம் வரைக்கு பரவியது அச்சத்தை ஏற்படுத்தியது.
உண்ணி கடித்தலில் இருந்து நாயை பாதுகாப்பதே தொற்று பரவாமல் தடுக்க சிறந்த வழி என்றும், நாள்தோறும் நாய்களை பராமரித்து உண்ணி தாக்குதல் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றும் டாக்டர் Mary Carr கூறியுள்ளார். ஒருவேளை நாய் நோய்வாய்ப்பட்டால் கால்நடை மருத்துவரிடம் நாயை எங்கெல்லாம் அழைத்துச் சென்றீர்கள் என்ற விவரத்தை தெளிவாக குறிப்பிடும் படியும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு தங்கள் நாய்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Ehrlichiosis பாதிப்புள்ள நாய்களுக்கு காய்ச்சல், பசியின்மை, சோம்பல், மூக்கில் ரத்தப்போக்கு, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம் என்றும், முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில், உண்ணி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவாது என்றாலும் மிக அரிதாக பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.