தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறையத் தொடங்கி உள்ள நிலையில் இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை குறையாமல் உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ள தமிழக அரசு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறது. அதேநேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள காப்பகங்களில் ஆதரவற்றோர், வீடற்றோர் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அமைந்துள்ள 13 காப்பகங்கள் மற்றும் 8 சிறார் மையங்கள் தவிர்த்து மீதமுள்ள 34 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலே குறிப்பிட்ட 34 காப்பகங்களில் 1137 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 174 பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்து 317 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 217 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 33 ஆயிரத்து 263 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. 500 ஐ நெருங்கும் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக நீடித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 483 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே கொரோனோவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், போதிய அளவில் அனைத்தும் கிடைப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.