டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போதைக்கு தொற்றுப்பரவல் முற்றிலும் கட்டுக்கு வரும் நிலை இல்லை என்றும், அருகமை பிராந்தியங்கள் எல்லைகளை திறக்காமல் வாழ பழகிக் கொள்ளுமாறும் நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் எல்லை திறக்கப்படும் பட்சத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறிய Gladys Berejiklian அவற்றின் எண்ணிக்கையை கூறவில்லை.
விக்டோரியா உள்ளிட்ட மாகாண ப்ரீமியர்கள் தொற்று இல்லா நிலை குறித்து தெரிவித்த தகவலையும் அவர் மறுத்துள்ளார். அத்தனை எளிதில் பூஜ்ஜிய நிலை சாத்தியமில்லை என்றும், நாள்தோறும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாக ப்ரீமியர் Gladys Berejiklian தெரிவித்துள்ளார். எல்லைகளை திறக்கும் பட்சத்தில் பூஜ்ஜியத்தில் உள்ள மாகாணங்களில் கூட தொற்றுப் பரவல் அதிகரிக்கும் என்றும், அதன் காரணமாகவே எல்லைகளை திறக்கும் முடிவு தற்போதைக்கு அரசுக்கு இல்லை என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அனைத்து மாகாணங்களிலும 70 முதல் 80 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திய பின்னரே எல்லைகளை திறப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். தொற்று எண்ணிக்கை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அல்ல கூறியுள்ள மோரிசன், வைரஸ் பாதித்தால் ஏற்படும் உடல் நலக்குறைவு, தீவிர சிகிச்சை பிரிவு, மருத்துவமனை என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், வைரஸ் பாதிப்பு மூலமாக ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பதே முக்கியமான ஒன்று என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார். ஆகஸ்ட் மாத இறுதியில் 6 மில்லியன் தடுப்பூசிகள் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் போடப்பட்டு இருக்கும் என்றும், அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் அந்த இலக்கு எட்டப்படும் என்று கூறியுள்ள ப்ரீமியர், நவம்பர் மாததில் 80 சதவீதம் பேர் முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும் Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3kt6uqi