தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் நாளொன்றுக்கு தொற்றால் பலியாகின்றனர். இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 335 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் பிரபலங்கள், ஆளுமைகள் உள்ளிட்டோரும் அடங்குவர்.
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும், தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் சடலங்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் நித்திஷ் மற்றும் இயக்குனர் பின்னணி பாடகர் அருண்ராஜா காமராஜ் ஆவின் மனைவி சிந்துஜா ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனர். இதேபோன்று பல்வேறு திரை பிரபலங்களும் ஆளுமைகளும் கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 33 ஆயிரத்து 75 ஆக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 6150 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியாகி அதனை மாற்றுவதற்குள் உயிரிழப்புகள் ஏற்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார் வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அரசு மருத்துவமனைகளுக்கு உரிய முறையில் பிரித்து அனுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் பல்வேறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அதன் தொடக்கமாக தற்போதே ஒருநாள் பாதிப்பில் சராசரியாக 12 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 274 குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.