தேசிய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் திமுக கூட்டணியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது கூட்டணியில் 25 இடங்களை பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது அப்போது கடும் போட்டி நிலவியது ஆலோசனைக்குப் பின்னர் சட்டமன்ற குழு தலைவரை இறுதி செய்யாமலேயே கூட்டம் நிறைவடைந்தது.
இந்நிலையில், மீண்டும் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் விஜயதரணி பிரின்ஸ், செல்வப்பெருந்தகை ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியதால் சட்டமன்ற குழு தலைவரை இறுதி செய்யாமலேயே இரண்டாவது கூட்டமும் நிறைவடைந்தது.
சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துக்களை கேட்பதற்காக டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுவை எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அவர்கள் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இடமும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டறிந்தனர். பின்னர் முடிவுகளை டெல்லி தலைமையிடம் கலந்தாலோசித்து விட்டு அறிவிக்கப்படும் என்று கூறினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யை பொருத்தவரையில் கடுமையான கோஷ்டி மோதல் நிலவிவரும் சூழலில் இதுபோன்ற நிர்வாக ரீதியிலான முடிவுகளை காங்கிரஸ் டெல்லி மேலிடம் அறிவிக்கும். அந்த வகையில் தற்போது சட்டமன்ற குழு தலைவர் குறித்த அறிவிப்பையும் டெல்லி தலைமையே அறிவிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் முடிவு எட்டப்படாத குழப்ப நிலையிலேயே கூட்டம் முடிவடைந்துள்ளதால் யார் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களது சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்துவிட்ட நிலையில் தேசிய கட்சியான காங்கிரசில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.
Link Source: https://bit.ly/3wf2VIQ