கடந்த 10-ம் தேதி பிரிஸ்பேனில் இருந்து கொரல் பிரின்ஸஸ் என்கிற சொகுசுக் கப்பல் 2300 பேருடன் புறப்பட்டது. அதிலுள்ள 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கியூன்ஸ்லாந்து தகவல் வெளியிட்டது. அவர்களில் 114 பேர் கப்பல் ஊழியர்கள் எனவும், மீதமுள்ள 4 பேர் பயணிகள் எனவும் விளக்கம் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கப்பலுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. பாதிக்கப்பட்ட பயணிகள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டோர் தங்களுடைய சேரும் இடத்துக்கு வருகையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இதனால் மற்றவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் தெரிவித்தது. இதனால் கப்பல் தொடர்ந்து பயணிக்க அனுமதி கிடைத்தது.
அதே சமயத்தில் கப்பலில் உள்ள பிற பயணிகள் பாதுகாப்பு உபகரணங்களுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு வலம் வருகின்றனர். அவர்களுக்கு அவ்வப்போது கப்பல் நிர்வாகம் பரிசோதனை செய்து வருகிறது. அந்த கப்பலில் மொத்தம் 2300 பேர் உள்ளனர். இவர்களில் கப்பல் ஊழியர்களும் அடக்கம். இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸின் ஈடன் துறைமுகத்துக்கு அக்கப்பல் வந்தடைந்துள்ளது. இதையடுத்து ஈடன் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி கப்பலில் இருந்து யாரும் வெளியேற முடியாதபடி, நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸில் தற்போது ஒமைக்ரான் வகை பிஏ.4 மற்றும் பிஏ.5 கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. தற்போது மருத்துவமனைகளில் 2049 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 58 பேருக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் புதன்கிழமை கொரல் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பல் சிட்னி செல்லவுள்ளது. உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சொகுசுக் கப்பல் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியம் என்பதால், அரசு கொரல் பிரின்ஸஸ் பயணத்தை தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.