அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், தலைநகர் வாஷிங்கடனில் அமைந்துள்ள போர் செயல்பாடு மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனா மிகப்பெரிய ராணுவக் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் பல்வேறு நாடுகளுக்கு எதிர்காலத்தில் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா கைக்கோர்க்கும் பட்சத்தில் அதை தடுக்கலாம். இதற்கு இரண்டு நாடுகளும் ராணுவத்தை சமநிலைப்படுத்த வேண்டும். அதன் காரணமாக இந்தோ – பசிபிக் பகுதியில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று ரிச்சர்ட் மார்லஸ் உரையில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அமெரிக்க பயணத்தில் அடுத்ததாக, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடனான AUKUS உடன்படிக்கை குறித்து காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.