மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிளோஹோல்ஸ் பகுதியில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பயணம் மேற்கொண்ட எல்லி ஸ்மித் – ஜேக் கிளிடன் தம்பதி தங்களுடைய இரு குழந்தைகளுடன் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். பிளோஹோல்ஸ் பகுதி கூடாரம் அமைத்து தங்குவதற்கு ஏற்ற இடம் என்பதால், ஏராளமான மக்கள் இப்பகுதியில் தங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் அக்டோபர் 16 ஆம் தேதி காலை கண் விழித்து பார்த்த போது, தங்களுடைய மூத்த மகள் 4 வயதே ஆன கிளியோ ஸ்மித்தை காணவில்லை என்றும், கூடாரத்தின் பற்பிணை (ஜிப்) திறக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். 4 வயது சிறுமியான கிளியோ ஸ்மித்தின் உயரத்திற்கும் எட்டும் தூரத்தில் அந்த பற்பிணை இல்லை என்பதால், அந்த சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை ஆணையர் Col Blanch சிறுமியை தேடும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அந்த முகாம் இடத்திற்கும் வந்து சென்றவர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் அனைவரையும் சந்தேகம் கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் காவல் துறையினர், பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, அல்லது அந்த குறிப்பிட்ட நாளில் அப்பகுதிக்கு சென்றுவந்தவர்கள், தங்கள் கார்களில் உள்ள கேமரா காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுமி காணாமல் போய் 10 நாட்களை கடந்த நிலையில், தன்னுடைய மகளை மீட்டு தரும்படியும், மீண்டும் தன் மகளை காண வேண்டும் என்று உருக்கத்துடன் எட்டீ ஸ்மித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிளோஹோல்ஸ் முகாம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்கு வருபவர்கள் தாங்களாகவே பணத்தை செலுத்தும் நடைமுறையே பின்பற்றப்படுவதால், அங்கு வந்து சென்றவர்களின் விவரத்தை சேகரிப்பதில் சவால் உள்ளது. மேலும் காணாமல் போன 4 வயது குழந்தையை மீட்க பெடரல் காவல்துறையும், மேற்கு ஆஸ்திரேலிய காவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏராளமான அழைப்புகளும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வருவதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3pGEZ0I