கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நிலவரப்படி தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 440 மெட்ரிக் டன்னாக உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் இது 400 மெட்ரிக் டன் அதிகரித்து அன்றாடத்தேவை 840 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில், தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 220 டன் மெட்ரிக் டன்னாக உள்ளது என்றும், இதன் மூலம் தேவையை பூர்த்தி செய்ய இயலாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழகத்துக்கு 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்றும் 20 க்ரையோஜெனிக் கன்டெய்னர்களையும் அவற்றை கொண்டு வர ரயில்களையும் வழங்குமாறு கடிதம் வாயிலாக ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, வெள்ளியன்று காலை முதலமைச்சர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து சட்டப்பேரவைக்கு சென்ற முதல்வர் அதிகாரப்பூர்வமாக தனது பணிகளை தொடங்கினார். முதலாவதாக 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு மற்றும் தனியார் மருத்துவமனையில் கோரோனா சிகிச்சைக்கு அரசே கட்டணத்தை செலுத்தும் ஆகிய அரசாணைகளை பிறப்பித்து முதல்வர் கையெழுத்திட்டார். இதனையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கொரொனாவை தடுப்பதில் எந்த ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்றும், புகழுரைகள் பொய்யுரைகள் எதுவும் தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முதல்வரின் தனிச் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதில் புதிய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
Link Source: https://bit.ly/3baoiD1