சூழலியல் ஆராய்சியாளரான டாம் பிலிஃப்ஸ் (57) பல ஆண்டுகளாக பிரேசிலில் வசித்து வருகிறார். சமீபமாக மழைகாடுகள் குறித்த ஆய்வில் அவர் ஈடுபட துவங்கினார். அதற்காக பிரேசில் நாட்டைச் சேர்ந்த அரோவ்ஜா பெராரியா என்பவரையும் இந்த ஆய்வில் அவர் இணைத்துக் கொண்டார்.
இருவரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் ஜாவேரி பள்ளத்தாக்கு என்கிற பகுதிக்கு அருகே வசித்து வரும் சாவோ ரஃபேல் சமூக மக்களை சந்தித்துள்ளனர். அதை தொடர்ந்து அட்டாலியா டோ நார்தோ என்கிற பகுதிக்கு அவர்கள் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அட்டாலியா அப்பகுதிக்கு வந்து சேரவில்லை.
ஜாவேரி பள்ளத்தாக்கில் உலகத்தினரோடு தொடர்பில்லாத பல்வேறு பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் குறிப்பிடப்படுகிறது. போதைப் பொருள் கடத்துவது, கொலை மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்கள் அங்கு சகஜமாக நடக்கும் என்று கூறப்படுகிறது. பெரு வழியாக பிரேசிலுக்குள் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துவதற்கு ஜாவேரி பள்ளத்தாக்கு முக்கிய தளமாக உள்ளது.
இந்நிலையில் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, பிலிஃப்ஸ் மற்றும் அரோவ்ஜா பெராரியாவுக்கு மிரட்டல்கள் வந்தன. இதனால் பழங்குடி ஆய்வாளர் அரோவ்ஜா பெராரியா இந்த பயணத்தின் போது கையில் துப்பாக்கி வைத்திருந்தார். அவர்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்பது பதற்றத்தை ஏற்படுத்துகிறது என பிரேசில் போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரேசில் நாட்டின் மத்திய குற்றப்பிரிவினர் மற்றும் அமேசான் மாநில காவல்துறை, தேசிய பாதுகாப்பு படை உள்ளிட்டோர் இவர்களை தேடும் பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பிரேசிலின் கப்பல் படையினரும் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இருவரை குறித்த எந்த தகவலும் இல்லை என்று பிரேசில் காவல்துறை தகவல் கூறியுள்ளது.