ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கார் பியாஸ்ட்ரி சவுதி அரேபியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டிற்கான தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளார் அவர்.
இருப்பினும் இந்த பந்தயத்தின் போது நடைபெற்ற இரண்டு சம்பவங்களால், போட்டி இருபது நிமிடங்களுக்கும் குறைவாக குறைக்கப்பட்டது. இதனால், அரை புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட்டது.
இதில் மிகமோசமான் சம்பவம் பந்தயத்தின் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. தியோ பர்சேயர் மற்றும் என்சோ ஃபிட்டிபால்டி இடையே நடந்த மிகப்பெரிய மோதலால், சிவப்புக் கொடி பறக்கவிடப்பட்டது.
இரண்டு ஓட்டுநர்களும் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், கார்களில் இருந்து வெளியே எடுக்கப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்தது ரசிகர்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்தது. விபத்திற்க்குப் பிறகு, FIA இரண்டு ஓட்டுநர்களின் நிலையை பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. “ஓட்டுனர்கள் உடனடியாக மருத்துவக் குழுவினரால் கவனிக்கப்பட்டனர்,” என்று அது கூறியுள்ளது.
“இருவரும் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஜெட்டாவில் உள்ள கிங் ஃபஹத் ஆயுதப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தயம் மீண்டும் தொடங்கியபோது, பியாஸ்ட்ரி முன்னிலை பெற்றார். ஆனால், நான்கு சுற்றுகளின் முடிவில், கில்ஹெர்ம் சாமியாவும் ஒல்லி கால்டுவெல்லும் மோதிக்கொண்டனர், இதனால் மீண்டும் சிவப்பு கொடி பறக்கவிடபட்டது.
இந்த போட்டிக்குப் பிறகு பேசிய பியாஸ்ட்ரி, ‘’வெற்றியை விட ஓட்டுநர்களின் ஆரோக்கியமே முக்கியம்’’, என்று கூறினார். “புள்ளிகள் நிலைமை நன்றாக உள்ளது, விபத்தில் இருந்து அனைவரும் சரியாகிவிடுவார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு மிக முக்கியமான விஷயம், இறுதிச் சுற்றில் அடுத்த வாரம் சந்திப்போம்.” என்றும் பியாஸ்ட்ரி கூறினார்.
Link Source: https://ab.co/3oxY2t2