முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடன் வசித்து வந்த அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். அவருடன் ஒன்றாக வசித்த போது மூன்று முறை கர்ப்பம் தரித்து அதை கலைத்ததாகவும் சாந்தினி கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் புகார் அளித்துள்ள சாந்தினி 2017 ஆம் ஆண்டு முதல் மணிகண்டனை தனக்கு தெரியும் என்றும் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் அவருடனான வாட்ஸ் அப் உரையாடல்கள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் கரு கலைத்தற்கான மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் புகார் மனுவுடன் சமர்ப்பித்து உள்ளார்.
அரசு கேபிள் டிவி விவகாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உடனான மோதலில் மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் பதவி பறிபோன பின்பு தன்னிடம் அடிக்கடி தகராறு செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் சாந்தினி தெரிவித்துள்ளார். மேலும் அவரது செல்வாக்கை பயன்படுத்தி தன் மீது பொய் வழக்கை பதிவு செய்வதாகவும் ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சாந்தினி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இதனிடையே சாந்தினி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவரது வழக்கறிஞர் தன்னை தொடர்பு கொண்டு மூன்று கோடி ரூபாய் பணம் கேட்டதாகவும் கூறியுள்ளார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சாந்தினி உள்ளிட்ட நபர்கள் மீது சட்டரீதியாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
மலேசிய சுற்றுலா துறையின் பிரதிநிதியாக தமிழகத்தில் பணியாற்றிவந்த சாந்தினி நாடோடிகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான சாந்தினியின் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Link Source: https://bit.ly/34swyud