விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து அம்மாகாணத்தில் மே 26 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் இருந்து குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் போன்ற அண்டை மாகாணங்களுக்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மெல்போர்ன் நகரில் இருந்து ஜூன் 1 ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பயணத்தை தொடங்கிய அப்பெண் தன்னுடைய குடும்பத்தினருடன் ஒரே காரில் பயணம் செய்துள்ளார். இவர் ஜூன் 5 ஆம் தேதி குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குள் நுழைந்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath, மெல்போரினில் இருந்து குயின்ஸ்லாந்து வந்த பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். விக்டோரியாவில் ஊரடங்கு அமலில் இருந்த போது அவர் எப்படி, குயின்ஸ்லாந்துக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பெண்ணுக்கு ஜூன் 1 ஆம் தேதி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சன் ஷைன் கடற்கரை, டூவூம்பா, கூண்டிவூண்டி போன்ற பகுதிகளில் தற்போது தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளுக்கு வந்து சென்ற பொது மக்கள் தானாக முன்வந்து தங்களை பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஜென்னட் யங் பேசிய போது, மெல்போர்ன் பெண் வந்து சென்ற பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டு வருவதாகவும், அந்த இடங்களுக்கு வந்த் சென்ற மக்கள் அவசியம் பரிசோதனை செய்துக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் Yvette D’Ath தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் தவிர்த்து விக்டோரியாவின் பிற பகுதியில் இருந்து வருபவர்களுக்கு அறிவிக்கப்படவிருந்த தளர்வில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் தவிர்த்து விக்டோரியாவின் பிற பகுதியில் இருந்து வருபவர்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் அமலுக்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
அனுமதியின்றி குயின்ஸ்லாந்திற்குள் தொற்றுடன் மெல்போர்ன் பெண் நுழைந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை துணை ஆணையர் ஸ்டீவ் கோல்ஸ்விசிக், ஓவ்வொரு நபரையும் காவல்துறையால் கண்காணிப்பது கடினம் என்றும், விதிமுறையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/2RF9Agz