டிக்டாக் உள்ளிட்ட செயலிகளில், மக்கள் கூட்டம் அதிகமான இடங்களில் எடுக்கப்படும் வீடியோக்களுக்கு பெரும் ரசிகர் வட்டம் உண்டு. பொதுவெளியில் எடுக்கப்படும் இதுபோன்ற வீடியோக்களால், தனிமனிதச் சுதந்திரம் மீறப்படுவதாகவும், மக்கள் அறியாத வண்ணம் வீடியோ எடுத்து அதன்மூலம் சுயலாபம் அடைவதாக, பல்வேறு சமூகவலைதள பயனர்கள் மீது குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பாக சிட்னி சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் பார்பரா மெக்டோனால்டு சில நடைமுறைகளை விரிவுப்படுத்தியுள்ளார். அதன்படி விளையாட்டு மைதானம், மளிகைக் கடை, உணவகங்கள், வணிகவளாகங்கள், கச்சேரி நிகழ்வுகள் போன்ற பொது இடங்களில் இருக்கும் சராசரி மக்களை மையமாக வைத்து, அவர்களுக்கு தெரியாமல் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தால், அதன்மீது இரண்டு வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
வீடியோ எடுத்த நபர் மற்றும் அவர் எடுத்த வீடியோ தொடர்பாக சம்மந்தப்பட்ட சமூகவலைதள நிறுவனத்தில் புகார் அளிப்பது அல்லது வீடியோ எடுத்த நபரின் விவரங்கள் தெரிந்திருந்தால், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் பார்பரா மெக்டோனால்டு. அதிலும் இரண்டாவது வழிமுறையில் ஆபத்து இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட வீடியோவில் புகார் அளிப்பவருடைய பங்கீடு என்ன என்பதை வைத்து தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். புகாருக்கான முகாந்திரம் வீடியோவில் இல்லையென்றால், புகார் தள்ளுபடி செய்யப்படும் என்பதையும் பார்பரா மெக்டோனால்டு சுட்டிக்காட்டுகிறார்.
யாரையும் புண்படுத்தாமல், அவமதிக்காமல் பொதுவெளியில் வீடியோ எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஒருவேளை குறிப்பிட்ட வீடியோவின் உள்ளடக்கத்தால் ஒருவர் பாதிக்கப்படும் போது புகாருக்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில், வீடியோ எடுத்த நபர் மற்றும் வீடியோ பதிவிடப்பட்ட சமூகவலைதள நிறுவனம் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்கிறார் பேராசிரியர் பார்பரா மெக்டோனால்டு.