நியூசிலாந்தை ஒட்டியுள்ள தெற்கு பசிபிக் கடலுக்கு அடியிலுள்ள எரிமலை கடந்த 15-ம் தேதி சீற்றம் அடைந்தது. இதனால் ஆழிப்பேரலைகள் உருவாகி பசிபிக் பெருங்கடலிலுள்ள சில தீவுகளை தாக்கின. டோங்கா தீவின் தலைநகரான நூக்கு அலஃபோவை சுனாமி தாக்கியதில் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது.
தொடர்ந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதரவு கரம் நீட்டியுள்ள ஆஸ்திரேலியா நாடு தற்காலிக தங்குமிடம், சுகாதார கருவிகள், தண்ணீர் கொள்கலன்கள் மற்றும் சாம்பல் அகற்றும் உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. அதேபோல மற்றொரு விமானம் வழியாக குடிநீர், தற்காலிக தங்குமிடம் அமைப்பதற்கான சாதனங்கள், மின்சார உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டண்டன், நாங்கள் டோங்கா நாட்டை தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறோம். அவர்களுடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ராயல் ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான ஹெ.எம்.ஏ.எஸ் அடிலெய்டு கப்பல் பிரிஸ்மேனில் இருந்து டோங்காவுக்கு புறப்பட்டுள்ளது. அதில் மீட்பு பணிக்கு உதவும் முக்கியமான உபகரணங்கள், பேரிடர் நிவாரணப் பொருட்கள் மற்றும் மூன்று சின்னூக் ஹெலிகாப்டர்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 நாட்கள் பயணித்து ஹெ.எம்.ஏ.எஸ் அடிலெய்டு டோங்காவை அடையவுள்ளது. மேலும் கப்பல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளமாகவும் இயங்கும்.
Link Source: https://bit.ly/3nLP7n5