Brunswick நகரில் கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று ஆல்பர்ட்தெருவில் உள்ள வுல்வொர்த் கடையில் இருந்து கடைசியாக மரியம் ஹம்கா வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆண் ஒருவருடன் பைகளில் துணிகளுடன் புறப்பட்டுச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரம் அந்த நபர் யார் என்பதை உறுதிப்படுத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன மரியம் ஹம்கா, தான் Brighton-ல் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுவருவதாக கூறியுள்ளார். கடந்த 5 நாட்களுக்கம் மேலாக அவரது குடும்பத்தினர் ஹம்காவை காணாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மரியம் ஹம்கா தனது குடும்பத்தினருடன் சில சிக்கல்களை கொண்டிருந்தார் என்றும், இதுபோன்று குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதும், குடும்பத்தினரை தொடர்புகொள்ளாமல் பல நாட்கள் இருப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது என்று விசாரணை அதிகாரி ஆண்ட்ரு ஸ்டாம்பர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், நாட்கள் அதிகரித்து வருவதும் ஹம்காவின் தொலைபேசி, சமூக வலைதளக் கணக்குகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதும் பதற்றத்தை ஏற்படுத்தியதால் குடும்பத்தினர் இறுதியாக காவல்துறையிடம் வந்திருப்பதாகவும் ஆண்ட்ரு கூறியுள்ளார்.
Brighton-ல் உள்ள வெல் ஸ்ட்ரீடில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வெள்ளியன்று இரவு 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர், மரியம் ஹம்காவின் முன்னாள் நண்பர் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெல் ஸ்ட்ரீடில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மரியம் ஹம்காவை அடையாளம் தெரிந்தவர்கள் என்பதால், குற்றப்பிரிவு அதிகாரிகளை தொடர்புகொண்டு ஹம்கா பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் ஆண்ட்ரு ஸ்டாம்பர் தெரிவித்துள்ளார்.
165 செ.மீ உயரம் கொண்ட மரியம் ஹம்கா, நீண்ட கூந்தல் கொண்டவர் என்றும், காணாமல் போன அன்று கருப்பு நிற உடை அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், கடைசியாக அவர் வந்த வுல்வொர்த் சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஹம்கா யாருடன் சென்றிருப்பார் என்று விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.