முன்னணி மருத்துவர் ஒருவர், ஆஸ்திரேலியாவின் பிராந்திய மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு மருத்துவ நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பிட்ட இப்பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பல்கலைக்கழக கடனை அரசே செலுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.
ஆனால் கிராமப்புற சுகாதார சேவைகளில் உள்ள, முக்கிய பிரச்சினையான பொது மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு, இத்திட்டம் தீர்வு காணவில்லை என, பொது மருத்துவரும், ஆஸ்திரேலியாவின் கிராமப்புற மருத்துவர்கள் சங்க முன்னாள் தலைவருமான ஷீலாக் க்ரோனின் கூறியுள்ளார்.
மேலும் அவர், ”மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்து, பிராந்திய பகுதிகளுக்கு செல்ல அவர்களை ஊக்குவிக்க கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசு, தாராளமாக பணத்தை செலவழித்து வருகிறது”. “ஆனால் பிரச்சனை என்னவென்றால், பயிற்சி மருத்துவர்கள் ஓரிரு வருடங்கள் உள்ளூர் மருத்துவமனையில் பணியாற்றிய பின்பு, மீண்டும் நகர பகுதிகளுக்கு திரும்பிவிடுகிறார்கள் என்பதால், இத்திட்டத்தால் பயனில்லை”.
மேற்கு குயின்ஸ்லாந்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமருத்துவ துறையில் சேவையாற்றிய டாக்டர் க்ரோனின், கிராமப்புறங்களில் பொது மருத்துவத்தை ஒரு கவர்ச்சிகரமான திட்டமாக மாற்ற, மேலும் அதிகமாக நிதி முதலீடு செய்யப்படவேண்டும் என்று கூறினார்.
தற்போது, பெரும்பாலும் மருத்துவமனைகளே செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருப்பமான பணியிடமாக உள்ளன, காரணம் அங்கு அவர்களால் அதிக பணம் சம்பாதிக்க முடிகிறது. ”பெரும்பாலான மருத்துவப் பணிகள் பொது மருத்துவத்திலேயே செய்யப்படுகின்றன, இருப்பினும் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் உட்பட ஆஸ்திரேலியா முழுவதும் பொது மருத்துவர்களுக்கே அதிகமாக பற்றாக்குறை உள்ளது, அதனால் அங்குதான் நிதியும் அதிகமாக செலவழிக்கப்பட வேண்டும்”, என்றார் க்ரோனின்.
மேலும் பேசிய அவர்,”ஒரு தொழிலாக பொதுமருத்துவதுறையில் நிதிவருவாய் குறைவாக உள்ளது. எனவே கிராமப்புறங்களில் மருத்துவ பணி என்பது, அங்கு மருத்துவமனைகளில் பணியாற்றும் சூழலை ஏற்படுத்தாவிட்டால், சாத்தியமில்லை.
காரணம் மருத்துவமனைகளில் வருவாய் அதிகம். ஆனால் பொது மருத்துவத்தில் பணிச்சுமை அதிகம், வருவாய் மிகக்குறைவு. பொது மருத்துவர்கள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில், நோயாளிகளைக் கவனிக்க, மோசமான சூழ்நிலைகளில், மகத்தான சேவையாற்றி வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவர்களுக்கு மிகவும் அவமரியாதையே வழங்கி வருகிறது”, எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.
Link Source: https://ab.co/3dIgrxa