டார்வினிலுள்ள மைக்கேல் குன்னரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் தெரியவந்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 47 வயதான ஆண் ஒருவரை கைது செய்துள்ளனர். அந்த நபர் தான் மைக்கேல் குன்னரின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை முன்னாள் முதல்வர் மைக்கேல் குன்னரும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், எனது புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனது பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நலமாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தவுள்ளேன் என்று குன்னர் பதிவிட்டுள்ளார்.
வடக்கு பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, மைக்கேல் குன்னர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். இது தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு வரும் நபர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் மைக்கேல் குன்னருக்கு அவர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. சொந்த காரணங்களை முன்னிட்டு தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து அவர் மீதான எதிர்ப்பை போராட்டாக்காரர்கள் மேலும் தீவிரமாக காட்ட துவங்கினர். அவருடைய குடும்பத்தினர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, அவர்கள் போராடத் துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.