உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான நெருக்கடி கடுமையாக தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கிழக்கு உக்ரைன் எல்லைக்கு உள்பட்ட இரண்டு பிரிவினைவாத ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை அவற்றின் தன்னாட்சி மிக்க பிரதேசங்களாக அங்கீகரித்துள்ளார்.
ஆஸ்திரேலியா எப்போதும் கொடுமைப்படுத்தும் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் என்றும், ரஷ்யா விவகாரத்தில் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் விசாவுக்காக விண்ணப்பித்து இருக்கும் உக்ரைனியர்களின் விண்ணப்பம் தொடர்பாகவும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கான நிதி பரிவர்த்தனை நடவடிக்கைகள் மற்றும் பயணங்களில் தடை ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் கொடுமைகளுக்கு ஆஸ்திரேலியா ஒருபோதும் துணை நிற்காது என்றும், அதற்கு எதிரான நிலைப்பாட்டையே தங்கள் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா தொடங்க உள்ளதாகவும் அதற்கான போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தொலைத்தொடர்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சர்வதேச நிதி செலாவணி விவகாரங்களிலும் ரஷ்யா விவகாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ரஷ்யாவின் உடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கான ரஷ்ய தூதர் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ஆஸ்திரேலியா தங்களது நிலைப்பாட்டை உறுதியுடன் தெரிவிக்க இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne கூறியுள்ளார்.
Link Source: https://bit.ly/3sVVYw8