கிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வந்தது.
இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிப்புகளில் ஏராளமானோர் சிக்கி தவித்து வருகின்றனர் இந்நிலையில் Sunshine Coast – Eumundi பகுதியில் Belli Park என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய கார் ஒன்றிலிருந்து 63 வயதான பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக அந்த பகுதியில் கார் ஒன்று சிக்கியிருப்பதாக ரோந்து போலீசார் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், உட்பட்ட காரில் இருந்து உயிரிழந்த நிலையில் 63 வயதான பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து ப்ரீமியர் Annastacia Palaszczuk இது மிகவும் அதிர்ச்சியான, துக்க கரமான செய்தியாக இருப்பதாக கூறியுள்ளார். அந்த காரில் அவர் மட்டுமே இருந்ததாகவும் அவரே காரை இயக்கி சென்ற நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்திருக்க கூடும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மழை வெள்ள பாதிப்புகள் சிக்கி மாயமான 10 பேரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் அதிகாரி Craig Hawkins கூறியுள்ளார்.
இதனிடையே மீட்பு பணிகள் மற்றும் தேடுதல் பணிகளில் காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்ட பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் 54 வயதான நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரம் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவில் பெய்த 408 மில்லி மீட்டர் மழை காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3LYMOb1