ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. விக்டோரியா மாகாணத்தில் 200 நாட்களை கடந்து ஊரடங்கு நீடித்ததால் ஏராளமான பாதிப்புகளை மக்கள் சந்தித்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக ஏராளமான மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்த்து வந்தனர்.
மருத்துவ துறை நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி இல்லை என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏராளமான மக்கள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் புற்று நோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய முடியாமல் போனதாகவும், இதனாலேயே இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதாக பேராசிரியர் சூ இவான்ஸ் தெரிவிக்கிறார்.
விக்டோரியா சுகாதாரத்துறையின் புள்ளிவிவரத்தின் படி, ஏப்ரல்- ஜூலை மாத புள்ளி விவரங்களுடன் கடந்த 3 ஆண்டு முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் கடந்த 3 ஆண்டுகளை விட மார்பக புற்று நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 37% குறைவாகவும், குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23% குறைவாகவும் இந்தாண்டு கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தோராயமாக விக்டோரியாவில் மட்டும் தற்போது 3500 பேருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் அந்த பாதிப்பு கண்டறியப்படாமலேயே உள்ளதாகவும் பேராசிரியர் இவான்ஸ் கூறுகிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்று நோயின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் என்றும் வேதனை தெரிவிக்கிறார். இத்துறை மருத்துவர்களின் அச்சத்தை உறுதி படுத்தும் விதமாக ஏராளமானவர்கள் தற்போது புற்று நோயின் இரண்டாம் கட்டத்தில் மருத்துவமனையை அணுகுவது தெரியவந்துள்ளது.
உதாரணமாக 46 வயதான Honnie Strachanக்கு ஊரடங்கு காலத்தின் ஆரம்ப கட்டத்தில் தன்னுடைய நாக்குப்பகுதியில் சிறிய புண் தென்பட்டதாகவும், ஆனால் கொரோனா தொற்று அச்சத்தால் மருத்துவமனைக்கு செல்ல தான் தயங்கியதாகவும், இதனால் தனக்கு நாக்கு பகுதியில் ஏற்பட்டிருந்த புற்று நோயை மிக கால தாமதாமாகவே கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தன்னுடைய நாக்கு பகுதியளவு துண்டிக்கப்பட்ட நிலையில், கை சதை பகுதியை கொண்டு மாற்று நாக்கு பொருத்தியுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.
இதே போன்ற பல பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ள வேண்டிய மார்பக புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதன் காரணமாக புற்று நோய் முற்றிய தருவாயில் மருத்துவமனையை நாடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு உரிய பரிசோதனையை மக்கள் அவப்போது மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்துறை சார்ந்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Link Source: https://ab.co/3He50Ld