ஆஸ்திரேலியாவின் பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி 7 வயதான ஐஸ்வர்யா அஸ்வத் என்ற சிறுமி அனுமதிக்கப்பட்டார். பேக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காததாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்ததாக ஐஸ்வர்யாவின் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தனர்.
சிறுமி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உட் குழுவானது கடந்த மே மாதம் தன்னுடைய அறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையில் சிறுமி உயிரிழப்புக்கு அவரின் பெற்றோரை காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுமிக்கு இருந்த பாதிப்பை உரிய நேரத்தில் கண்டறியாததும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த வாய்ப்பை ஐஸ்வர்யாவின் பெற்றோர் தவர விட்டதாகவும் இந்த உட்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குழுவானது 11 பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது. அதில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், நோய் கண்டறியும் சாதனத்தை ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும், மூன்றாம் நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐஸ்வர்யாவின் பெற்றோர் அஸ்வத் சவூட்டிபூரா மற்றும் பிரசித்தா சசிதரன் கோரிக்கை விடுத்தனர்.
தங்களை போல மற்ற பெற்றோர் பாதிக்கப்படக்கூடாது என்றும் இவ்விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ரோஜர் குக் மூன்றாம் நபர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதன் அறிக்கை 10 வாரங்களில் சமர்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 25 வாரங்களுக்கு பிறகு இந்த அறிக்கையின் நகல் ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையின் தரம் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த குழுவானது குழந்தை உயிரிழப்புக்கான காரணம், பெர்த் குழந்தைகள் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குக் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த ஐஸ்வர்யாவுக்கு நீதிகிடைப்பது மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டதாக அமைச்சர் ரோஜர் குக் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Link Source: https://ab.co/3ol4p1J