பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையிலான குழுவான ஐபிசிசி மேற்கொண்ட விரிவான ஆய்வுகளில் முடிவுகள் 42 பக்க அறிக்கையாக வெளியிடப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த விரிவான விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
க்ரீன்ஹவுஸ் வாயு வெளியிட்டதன் காரணமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும் என்று ஐபிசிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் வெப்பத்தின் அளவு கூடுதலாக ஒரு டிகிரி அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் புவிவெப்பமயமாதல் அளவு 2 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக தீவிர பருவநிலை மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த பத்தாண்டுகளில் மிக மோசமான வானிலை நிகழ்வுகள் மற்றும் காட்டுத் தீ உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஐபிசிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வு தற்போது 6 முதல் 9 ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும் 2050ஆம் ஆண்டுக்குள் அதீத கடல்மட்ட உயர்வை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் இந்த கடல் மட்ட உயர்வு இருப்பதால் இது மனித குலத்திற்கு எழுப்பப்படும் அபாயச் சங்கு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கிடையிலான குழுவைச் சேர்ந்த 195 நாடுகளும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. மேலும் புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்ட உயர்வுக்கு மனிதர்கள் எந்தெந்த வகைகளில் காரணமாக இருக்கிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் ஏற்படவிருக்கும் வானிலை மாற்றங்கள் மற்றும் காட்டுத்தீ உள்ளிட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்த இயலாது என்றும் கடல் மட்ட உயர்வு புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் ஏற்படுத்திய விளைவுகளை பெருமளவு காரணம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ், அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து போராடும் பட்சத்தில் நாம் இந்த அபாயத்திலிருந்து மீண்டு வர முடியும் என்றும், ஆனால் அதை எந்தவித தாமதமும் தயக்கமும் இன்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
14,000 பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வு மாதிரிகளை ஒருங்கிணைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு தான் ஐப்பிசிசி வெளியிட்டுள்ள தற்போதைய அறிக்கை ஆகும். எனவே இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது என்று ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கூறியுள்ளன.
Link Source: https://ab.co/3izaQN9