ஆஸ்திரேலியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வயதினருக்கும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடலாம் என பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்ததை அடுத்து, ஃபைசர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் குழப்பம் நிலவி வருகிறது.
இதனிடையே இரண்டாம் தவணை தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் என்று பொதுமக்களை தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly கேட்டுக் கொண்டுள்ளார். முதல் தவணை எடுத்துக் கொண்ட அதே தடுப்பூசியை இரண்டாவது தவணையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதேநேரம் தடுப்பூசியை மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் வேறு வேறு தடுப்பூசிகளை மாற்றி எடுத்துக்கொள்வது தொற்றுக்கு எதிராக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் கூறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்ட்ராசெனகா மற்றும் ஃபைசர் தடுப்பூசியை 50 வயதுக்கு மேற்பட்ட 830 பேருக்கு மாற்றி செலுத்தி ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது. இதன் மூலம் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அவர்கள் உடலில் தடுப்பூசிகள் உருவாக்கி இருப்பதாகவும் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு அமைப்புகள் வலுவாக செயல்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
முதலாவதாக அஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியும், ஃபைசர் எடுத்துக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தவணையாக அஸ்ட்ராசெனகாவும் செலுத்தப்பட்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசிகளை மாற்றி செலுத்துவதற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும், பற்றாக்குறை காரணமாக கூட தடுப்பூசி மாற்றி எடுத்துக்கொள்வதற்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்க வில்லை என்றும் கூறப்படுகிறது. ரத்தம் உறைதல் பிரச்சினை காரணமாக தடுப்பூசிகளை மாற்றி செலுத்துவதற்கு பல்வேறு நாடுகள் அனுமதி வழங்காத நிலையில், ஒரு சில நாடுகளில் தடுப்பூசிகள் மாற்றி செலுத்தப்பட்டு அதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேரத்தில் இது போன்று வேறு வேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்துவது புதிய வகை வைரசான டெல்டாவை எதிர்த்து போரிடுமா என்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Link Source: https://ab.co/2UdUY8W