தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு க ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அந்தவகையில், சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மற்றும் கோவை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தொற்றை கட்டுப்படுத்துவது, தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்டறிவது, பரிசோதனைகளை அதிகப்படுத்துவது மற்றும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் ஏற்பாடுகளை செய்து தருவது தொடர்பான ஆலோசனைகளை முதலமைச்சர் அதிகாரிகளுக்கு வழங்கினார். சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
மேலும் ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி, சாமிநாதன், ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி கயல்விழி செல்வராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 35 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 35 ஆயிரத்து 579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்றுவந்த 397 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6 ஆயிரத்து 73 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 368 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.
Link Source: https://bit.ly/2RugRjs