கடந்த மே 4ம் தேதி தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 57 வயதான நபர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். முதல் டோஸ் எடுத்துக்கொண்ட அவர் ரத்தம் உறைதல் பாதிப்பு காரணமாக தற்போது தீவிர அவசர சிகிச்சை பிரிவில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த மாகாணத்தில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் ரத்தம் உறைதல் புகார் எழும் முதல் நபர் இவர் ஆவார். அதே நேரத்தில் கடந்த மாதம் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 87 வயதான பெண் ஒருவருக்கும் இரண்டாவதாக ரத்தம் உறைதல் புகார் கண்டறியப்பட்டுள்ளதாக தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை சுகாதார அதிகாரி Nicola Spurrier தெரிவித்துள்ளனர்.
கடுமையான வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், பரிசோதனையில் ரத்தம் உறைதல் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், கூடுதல் அக்கறையோடு கவனிக்கப்பட்டது தான் என்றாலும் எதிர்பாராத ஒன்றல்ல என்றும் ஆஸ்திரேலிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பு கூறியுள்ளது. மே 11ம் தேதி அனுமதிக்கப்பட்ட 87 வயதான பெண் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா முழுவதும் இதுவரை 2.1 மில்லியன் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், அதில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 48 வயதான பெண் ஒருவர் ரத்தம் உறைதல் புகார் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு மில்லியன் பேரில் 11 பேருக்கு ரத்தம் உறைதல் புகார் கண்டறியப்படுவதாக தடுப்பூசி ஆய்வாளர் Rod Pearce கூறியுள்ளார். இதே நிலை பெரும்பாலான நாடுகளிலும் நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பக்கவிளைவுகளை கவனத்தில் கொண்டாலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே முழுமையான இலக்கு என்றும், அதற்கான நீண்ட கால திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றும் Rod Pearce தெரிவித்துள்ளார். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும், ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவரை வழங்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3hHjqJu