குயின்ஸ்லாந்து யுனைடிங்கேர் உள்ளிட்ட மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நோயாளிகள் அங்கு நடக்கும் விபரீதங்களை உணர்ந்து சைபர் தாக்குதல் தான் என முடிவுக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனை ஹாக் செய்யப்பட்ட அன்று பிரிஸ்பேனில் குறிப்பட்ட பகுதி முழுவதும் வை – ஃபை சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பிரச்சனையின் தீவிரம் தொடர்ந்தது. ஆனாலும், இது எப்படி நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை என மருத்துவமனை நோயாளிகளும், பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். செவிலியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை, நோயாளிகளின் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என பல்வேறு குளறுபடிகள் அந்த நேரத்தில் நிலவியதாக கூறப்படுகிறது. மருத்துவமனை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது என்றாலும், ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது.
மத்திய அரசின் சைபர் விசாரணை மையம் மருத்துவமனைகளில் சைபர் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் மருத்துவமனை தரப்பு இது தொடர்பான எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை. இது ரேன்சம்வேர் தாக்குதலா? நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய மருத்துவமனை தகவல்களை திருடும் முயற்சியா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் தகவல்களை திருட வாய்ப்பில்லை என நிர்வாகம் மறுத்து வருகிறது.
தாக்குதல் தொடர்பாக விளக்கமளித்துள்ள குயின்ஸ்லாந்த் துணை ப்ரீமியர் Steven Miles, பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளார். மேலும், இது போன்ற தாக்குதல்கள் பல்வேறு நிறுவனங்கள் மீதும், அமைப்புகள் மீதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்பாராத விதமாக மருத்துவமனை மீது தற்போது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எந்த தனிநபரின் தகவல்கள் கசிவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், தகவல்கள் பாதுகாக்கப்படுவதை வரும் காலத்தில் உறுதிசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பெருந்தொற்று காலத்தில் இது போன்று மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் அதிகரித்து வருவதாக சைபர் வல்லுநர் பால் ஹாஸ்கெல் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமான தகவல்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மருத்துவத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குயின்ஸ்லாந்து, பிரிஸ்பேன், ஹார்வே மருத்துவமனைகள் சந்தித்துள்ள இந்த சிக்கல்கள் விரைவில் களையப்பட வேண்டும் என்றும், மருத்துவமனையில் இருந்து எந்தவொரு தனிநபரின் தகவல்களும் கசியக்கூடாது என்பதில் கவனாமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3nACBpd