இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் உள்ள மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுதவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் டோஸ் வருகிற மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. இதையடுத்து, வருகிற மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தடுப்பூசி போட நேரடியாக மருத்துவமனைகளுக்கோ, தடுப்பூசி மையங்களுக்கோ செல்வதற்கு முன்னர் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கோவின் www.cowin.gov.in இணையதளம் அல்லது ஆரோக்ய சேது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
மாநில அரசுகளிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொருத்து பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முன்பதிவு செய்வதற்கான கோவின் இணையதளம் முடங்கியுள்ளது. அதேசமயம், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பதிவு தளத்தில் அதற்கான வயது வரம்பு இன்னும் பதிவேற்றப்படாமலும் இருக்கிறது. முன்பதிவு தளத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பதிவு செய்து கொள்ளலாம் என்று இருப்பதால் பலரும் முன்பதிவு செய்யமுடியாமல் உள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆரோக்கிய சேது, மாநில அரசுகள், தனியார் தடுப்பூசி மையங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி அமர்வுகளை திட்டமிட்டவுடன் அவர்களால் முன்பதிவு செய்து கொள்ள முடியும். கோவின் தளத்தில் தற்போது முன்பதிவு நடைபெறுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்த முயன்றதால் பல இடங்களில் சர்வர் முடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3xwhbhJ