விக்டோரிய மாநிலத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் அங்கமாக செல்போன் பயன்படுத்திய படி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதிக்க முடியும்.
இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்த விக்டோரிய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் 2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்றும், இதற்காக மாநில அரசு 33 மில்லியன் டாலர் நிதியை செலவிடவுள்ளது.
3 மாதங்கள் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் 6,79,438 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இவர்களில் 42 வாகன ஓட்டிகளுக்கு ஒருவர் வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்தியது தெரியவந்தது.
கொரோனா ஊரடங்கு இல்லாத சாதாரண நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
மெல்போர்ன் மற்றும் விக்டோரியாவின் மற்ற பகுதிகளில் கையடக்க கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நவீன கேமராக்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவதையும் கண்டறியும் என்று தெரிவித்துள்ள அரசு, 667 வாகன ஓட்டிகளில் ஒருவர் இந்த விதிமீறலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது..
செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் எல்லா கால நிலையில் பயன்படுத்தக்கூடிய வகையிலும், துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் திறன் பெற்றது.
இந்த புகைப்படங்களை பயிற்சி பெற்ற ஒருவர் ஆய்வுக்கு உட்படுத்தி விதிமீறல் உறுதி செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இத்ய் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை அமைச்சர் Danny Pearson வாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்துவது என்பது அப்பட்டமான விதிமீறல் என்றும், விக்டோரியாவின் சாலைகளில் சர்வசாதாரணமாக நடக்கும் இந்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் குறித்து ஆய்வு செய்துள்ள Monash பல்கலைக்கழகம், இத்தொழில்நுட்பத்தால் 95% சாலை விபத்துகளை தடுக்க முடியும் என்று கூறியுள்ளது. இத்திட்டம் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தை ஆய்வுக்குட்படுத்தி, மக்களிடம் கருத்து கேட்ட பிறகு 2023ல் இத்திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவு குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.