இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் , உத்தரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், படுக்கைகள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 3,46,786 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2624 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஓராண்டில் பதிவு செய்யப்பட்ட அதிக பாதிப்பாகும். இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,66,10,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 1,89,544 ஆக உள்ளது.
நாடு முழுவதும் 13,83,79,832 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.