இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் நன்றாக நகர்த்தல்களை மேற்கொண்டார். டார்ஸ்ச் வகை கேமை பயன்படுத்திய பிரக்ஞானந்தா வெறும் 19 நகர்த்தலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மெக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் முதல் முறையாக உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சி பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய தந்தை ரமேஷ்பாபு மற்றும் தாய் நாகலட்சுமி எப்படி இவர்களின் கவனத்தை மாற்றுவது என்று நினைத்துள்ளனர். அந்த சமயத்தில் தீவிர செஸ் ரசிகரான ரமேஷ் பாபு தன்னுடைய மகள் வைஷாலியை முதலில் செஸ் பயிற்சிக்கு சேர்த்துள்ளார்.
அக்கா வைஷாலி செஸ் பயிற்சி வகுப்பிற்கு செல்வதை பார்த்த பிரக்ஞானந்தாவிற்கு சிறுவயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்காவிடம் இருந்து நான்கு வயது முதல் செஸ் கற்று கொள்ள தொடங்கினார். 5 வயது முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். தன்னுடைய 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அத்துடன் 2019 டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்திருந்தார். தற்போது தன்னுடைய 16 வயதில் உலக சாம்பியன் மெக்ன்ஸ் கார்ல்சனை அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ‘என்ன ஒர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கறுப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது மாயாஜாலம்’. மேன்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.