இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாயாரான ராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். அடுத்த 2 நாட்களில் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.அவருக்கு கொரோனா பாதிப்பு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வருகிற வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து இலகுவான பணிகளை தொடர்ந்து செய்வார் என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி ராணி இரண்டாம் எலிசபெத் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் அனைத்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் பின்பற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் முழுமையாக கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொது நிகழ்வுகளில் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்க முடியாது என்பதன் காரணமாகவும் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பவளவிழா கொண்டாட்டங்களும் தற்போது தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளை நிறைவு செய்து தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்வுகளில் பங்கேற்று வரும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டத்தை நடத்துவதற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு தேவையான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது இடங்களில் நிகழ்வுகளில் பங்கேற்பது காரணமாக அவருக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அரண்மனை நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
Link Source: https://ab.co/3H8QEKZ