அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பிரிஸ்பேனில் மூன்று நாட்கள் கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிரிஸ்பேன், இப்ஸ்விச், லோகன், மோர்டன் மற்றும் ரெட்லேண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் பொருந்தும் .
இது குறித்து மாநில முதல்வர் Annastacia Palaszczuk கூறுகையில், இந்த நிலமையை கண்டு தான் மிகவும் வருந்துவதாகவும், மிகவும் மனவேதனை அளிப்பதாகவும் கூறினார். அனைவரும் ஒன்றிணைத்து இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைத்தால் நாம் அனைவரும் இதில் இருந்து மீள முடியும் என்று கூறினார். முக்கியமான ஷாப்பிங், உள்ளூர் பகுதியில் உடற்பயிற்சி, வேலை மற்றும் படிப்பு சம்மந்தப்பட்ட விஷயத்திற்கு மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடர்புடைய கொரோனா பாதிப்பு ஏழு பேருக்கு உறுதியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தில் தங்கள் வீடுகளில் 30 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வயதான பராமரிப்பு, ஊனமுற்றோர் சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கான வருகைகள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளது.