பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது . அதேநேரத்தில் இந்த மாணவர்களின் போராட்டத்தில் ஆசிரியர்களும் பங்கேற்கலாமா என்பது குறித்து குயின்ஸ்லாந்து ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாணவர்களின் போராட்டம் வரவேற்கக் கூடியதாக இருந்தாலும் பள்ளிகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் கலந்து ஆலோசித்து அதற்கேற்ப முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கிரேஸ் கிரேஸ், பள்ளிக்கு வராத மாணவர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என்றும், பள்ளிக்கு வராத நாட்கள் விடுப்பாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். போராட்டத்தில் கலந்து கொள்வது மாணவர்களின் தனிப்பட்ட முடிவாக இருந்தாலும் அவர்கள் கல்வி பாதிக்கக்கூடிய வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பது உகந்தது அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் சீருடையில் போராட்டத்தில் பங்கேற்பது என்பது கவனத்தை ஈர்க்கும் என்றும் அவர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளி பருவத்தில் பள்ளிக்கு வந்தால் மட்டுமே கற்றலையும், எதிர்காலத்திற்கு தேவையான அனுபவத்தையும் பெறமுடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Link Source: https://ab.co/3azUSgA