இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. உலகிலேயே நாள் ஒன்றுக்கு அதிக தொற்று கண்டறியப்படும் நாடாக இந்திய மாறியுள்ளது.
அதிக மக்கள் தொகை, போதிய கட்டுப்பாடு இன்மை, அரசின் நிர்வாகத்தோல்வி என்று பல காரணங்களால் இந்த தொற்று அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகளும், மருத்துவ வல்லுநர்களும் குற்றம்சாட்டிவருகின்றனர்.
நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் மகாராஸ்டிராவில் 22 பேர் உயிரிழந்த நிலையில், தலை நகரான டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஒரு சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் உள்ளதாகவும் நிலைமை மோசமடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடியிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை பிச்சையெடுத்தாவது பூர்த்தி செய்யுங்கள் என்று டெல்லி நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஆக்சிஜன் டேங்குகள், மருத்துவ உபகரணங்களையும், அத்தியாவசியமான பொருட்களை
மாநிலங்களுக்கிடையே எடுத்துச்செல்ல விமானப்படையின் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
C-17,C-130J,IL-76,AN-32 மற்றும் அவ்ரோ போன்ற விமானங்களும், சினூக் 17 மற்றும் M-17 போன்ற ஹெலிக்காப்டர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் நிலமை மோசமடைவதை கருத்தில் கொண்டு, கொச்சி, மும்பை, விசாக்கப்பட்டிணம் மற்றும் பெங்களூரில் இருந்து செவிலியர்களும், மருத்துவர்களும் தலைநகரான டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
மாநிலங்களைக்கிடையே ஆக்சிஜன் போக்குவரத்தை விரைவுப்படுத்த சி-17 மற்றும் ஐ எல்-76 இந்திய விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2020 கொரோனா தொற்று பரவலின் போது வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக இந்தியா அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.