டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் பற்றாகுறை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு, கொரோனா 3 வது அலை குறித்து நிபுணர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நாம் முன் தயாரிப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியள்ளது. இந்த 3 வது அலையில் பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் என்பதால், கூடுதல் ஆக்சிஜன் தேவையை அதிகரித்து கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லிக்கு தேவையான ஆக்சிஜன் அளவு 700 மெட்ரிக் டன் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் டெல்லிக்கு மட்டுமே கொடுக்கும் போது பிற மாநிலங்களுக்கு கொடுப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்தது மறுக்க முடியாதது என்றும், உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் போது டெல்லிக்கு வழங்குவதில் என்ன சிக்கல் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நீதிமன்றத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பழி போடும் விளையாட்டுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்தனர்.
டெல்லியில் கடந்த 4 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் மேத்தா, சமூக வலைதளங்களில் மக்கள் ஆக்சிஜன் தேவை என்று பதவிடுவது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் உயிரிழப்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வீடுகளில் உள்ள பல கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காடினர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், டெல்லியை போல பிற மாநிலங்களில் ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
மகாராஷ்டிராவில் கூடுதல் கையிருப்பை உறுதி செய்துள்ளதை போல பிற மாநிலங்களிலும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் செயல்முறையை அதிகரிக்க வேண்டும் என்றும், இதை கண்காணிக்க ஒரு மத்திய மையம் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
ஆக்சிஜன் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகளுக்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் மேத்தா, சுகாதாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்றும், அதை மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பதிலளித்தனர்.