தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக மருந்தின் தேவை அதிகரித்து வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற உடன் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தது. இந்நிலையில் கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரெம்டெசிவர் மருந்துக்காக நாள் கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உரிய மருத்துவச் சான்றிதழை அளித்து மருந்தை வாங்கி செல்லலாம் என்ற நிலை இருந்தாலும் மிக தீவிர தொற்று பாதிப்பு உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, தமிழக அரசுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகளில் 7000 குப்பிகளில் இருந்து நாளொன்றுக்கு 20,000 குப்பிகளாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். நாளொன்றுக்கு 50 லிருந்து 100 டோக்கன்கள் வரை விநியோகிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே நோயாளிகளின் உறவினர்களிடம் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு நாள் தொற்று பதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 28 ஆயிரத்து 979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 959 பேர் சிறார்கள் ஆவர். மேலும், 232 ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 149 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1 லட்சத்து 44 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அவரது ஆக்சிஜன் அளவு சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்ட தொகை இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இரண்டாயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அதே நேரம் கொரோனா ஊரடங்கை தொய்வின்றி செயல்படுத்த தமிழிகம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளனர்.
Link Source: https://cutt.ly/7bD0ahk