கொரோனா 2வது அலை தீவிரமாக பரவியுள்ள நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா, இல்லையா என்பது மிகப்பெரிய குழப்பமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே கடந்த ஆட்சிக்காலத்தில் தேர்வு தேதி இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பின்னர் அது தொற்றுப்பரவல் தீவிரம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரம் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தேர்வுத்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மேலும், பெற்றோர்கள் – மாணவர்களிடம் கருத்துக்கேட்பு நடத்திய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உடனும் அமைச்சர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தொற்றுப்பரவல் காரணமாக பெரும்பாலானோர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவே தெரிகிறது.
அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்தலாம் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிளஸ் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உறுதியோடு உள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாமே தவிர ரத்து செய்யப்படாது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவுகளை முதலமைச்சருடன் பகிர்ந்து கொண்டு அதன்பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் சுகாதாரத்துறையின் அறிவுரைகள் முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஓடாத பேருந்துகளுக்கும், போடாத சீருடைகளுக்கும் கூட சில தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாக சில புகார்கள் வந்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான சம்பளத்தொகை 2022 மார்ச் 31ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை சமாளிக்க அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
Link Source: https://bbc.in/3hsRmJS